தேயிலையின் வீழ்ச்சியும் : முள்ளுத்தேங்காயின் வருகையும் - ஜீவா சதாசிவம்

August 20, 2017


''உலகின் அதிசிறந்த தேயிலை எனும் பெருமையுடன் 150ஆவது வருடத்தை கொண்டாடுகின்றோம்''   பண்டாரநாயக்க ஞாபகார்த்த  சர்வதேச மாநாட்டு மண்டப வாயிலில் வடிவமைக்கப்பட்ட பதாகையில் பொறிக்கப்பட்டிருந்தது.

CRT (Coconut,  Rubber, Tea) வர்த்தக கண்காட்சி 2017  கடந்த வார இறுதியில் BMICH இல்  நடைபெற்றது. இக்கண்காட்சி பதாகையில் பொறிக்கப்பட்டிருந்த  அந்த வரிகள் மனதுக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும் வாயிலின் உள்ளே சென்றப்பின்  மனதுக்கு  பெரும் வருத்தத்தையும் தந்துவிட்டது.  

இந்நிலையிலேயே இலங்கையின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக இருந்து, சர்வதேசத்திற்கு இலங்கையை  அடையாளப்படுத்துவதில் முன்னிலை வகித்த 'தேயிலை' யின்  நிலைமை பற்றி அலசுகிறது இவ்வார 'அலசல்'. 

 ''1995ஆம் ஆண்டில் இருந்து 2015ஆம் ஆண்டுவரை இலங்கையின் தேயிலை உற்பத்தி இரு மடங்காகியுள்ளது. ஆனால், குறித்த இலக்கை அடைவதற்கான கால இடைவெளி அதிகமாகும். 2015ஆம் ஆண்டு தேயிலை உற்பத்தி 43 சதவீதமாக அதிகரித்து 2016ஆம் ஆண்டடில்  34 வீதமாக கீழிறங்யிருக்கிறது. ஆனால், தேயிலைத் தொழில் மொத்த உற்பத்தியில் வீழ்ச்சியடைந்து வருகின்றது. இது தேயிலையின் 150 ஆவது வருட பூர்த்தியை முன்னிட்டு BMICH இல் இடம்பெற்ற நிகழ்வில் பிரதமர் உரையாற்றியபோது தெரிவித்த கருத்து. 

பிரதமரின் கூற்று இங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. தேயிலை மாத்திரம் அல்ல அத்துறை சார் தொழிலாளர்களும் வாழ்வாதார விடயத்தில் வீழ்ச்சிப்போக்கில் சென்றுகொண்டிருப்பதை கண்டும் காணாமல் இருக்கின்ற நிலைமையே இருக்கின்றது.  

இவ்வருடத்தை தேயிலைக்கான வருடம் என்றும் கூட கூறலாம்.  இலங்கைத் தேயிலை தனது 150 ஆண்டு பிறந்த தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கின்றது.  இதன் ஓர் அடையாளமாக அண்மையில் 150வருட கொண்டாட்ட முத்திரையும் வெளியிடப்பட்டுள்ளது. இத்தினத்தை முன்னிட்டு தலவாக்கலை தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் (TRI) கொண்டாடப்பட்ட சர்வதேச தேயிலைத்தின   நிகழ்வுகளுக்கு ஜனாதிபதியும் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டிருந்தார். இது வரலாற்று முக்கியத்துவமிக்க நிகழ்வு. இவ்வருடத்திலேயே பாரதப்பிரதமரின் மலையக விஜயமும் இடம்பெற்றிருந்தது.  

தேயிலை தொழிற்துறைக்கு பதிலாக வேறு துறைகள் வந்திருந்தாலும் எந்தளவிற்கு மக்களுக்கு நன்மை விளைவிப்பதாக அமைந்திருக்கின்றது என்பது பற்றி பேச வேண்டியதொரு கட்டாயம் உள்ளது. மலையக தோட்டப்பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் தேயிலைத் தொழிற்துறை வீழ்ச்சி கண்டுள்ள அதேவேளை பெரும்பாலான தோட்டப்பகுதிகள் காடாக்கப்பட்டு வருகின்றது. தேயிலைத் தொழிற்துறையில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கையும் வீழ்ச்சியடைந்துள்ளது.  

இது இவ்வாறிருக்க முள்ளுத்தேங்காய்  (Palm Oil) உற்பத்தித் துறையும் இப்போது வளர்ச்சியடைந்து வருவதும் அவதானிக்க கூடியவிடயம். இது  தேயிலைத் தொழிற்துறையை பாதிக்க கூடியதான துறையாக இருக்கின்ற அதேவேளை இது மக்களின் நலன்சார் விடயத்துக்கும் சவாலாக இருக்கும் துறையாக இருப்பதாகவும் உள்ளது. 

'முள்ளுத்தேங்காய்'பற்றி வீரகேசரியின் மலையக இதழான சூரிய காந்தி பத்திரிகையில் மல்லியப்புசந்தி திலகரின் தொடரை தொடர்ச்சியாக படித்ததன் மூலமே இத்துறைசார் விடயம் பற்றி சில விடயங்களையும் அறிந்துகொள்ள முடிந்தது. தேயிலைத்துறைக்கு எவ்வாறு இது சவாலாக இருக்கின்றது என்பதையும் இத்தொடர் நன்றாக தெளிவுபடுத்தியிருந்தது. ஆகையால் முள்ளுத் தேங்காயையும் பற்றி பேச வேண்டியது அவசியம்.

இலங்கையின் காலி, நாஹியாவில் ஆரம்பிக்கப்பட்ட முள்ளுத்தேங்காய் உற்பத்தி 2004ஆம் ஆண்டுகளின் பின்னர் அதன் வளர்ச்சி பெரிதும் விரிவடைந்துள்ளது. 

இலங்கையில் தேங்காய் எண்ணெய்க்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் ஆகையால் வெளிநாட்டில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாலுமே 2004ஆம் ஆண்டு உள்நாட்டில் முள்ளுத்தேங்காய் உற்பத்தி விஸ்தரிக்கப்பட்டதாக தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் முன்னாள்  பணிப்பாளர் .Dr. ஜெயரட்ண தெரிவித்தார்.  முள்ளுத்தேங்காய் உற்பத்தி   பற்றிய முழுமையான  ஆராய்ச்சியை செய்துள்ள அவர் மேலும் சில விடயங்களையும் இவ்வாறு பகிர்ந்துகொள்கிறார். 

இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, நைஜீரியா, கொலம்பியா, தென் ஆபிரிக்கா, தென் அமெரிக்கா போன்ற நாடுகளிலேயே முள்ளுத்தேங்காய் எனும் Palm Oil உற்பத்தி பிரசித்திபெற்றுள்ளது. இலங்கைக்கான எண்ணெய்த் தேவையை பூர்த்தி செய்வதற்காகவே 2004ஆம் ஆண்டு 20000 ஹெக்டெயரில் இச்செய்கையை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது. ஆனால், தற்போது 9000 ஹெக்டெயரில் பண்ணப்படுகின்றது. இன்னும்  11000 ஹெக்டயர் தேவைப்படுகின்றது. 

இலங்கையில்  கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை ஆகிய மாவட்டங்களிலேயே பிரதானமாக இச்செய்கை பண்ணப்படுகின்றது.   ஒரு ஹெக்டயரில் 130 மரங்கள் உற்பத்தி செய்ய முடியும். ஐந்து வருடங்களில் இதன் மூலம் பலனை பெற முடியும். தொடர்ச்சியாக 25 வருடங்களுக்கு இதன் மூலம் இலாபத்தை பெறக்கூடியதாக இருக்கும். ஒரு ஹெக்டயரில் 6000 கிலோகிராம் அளவை பெற்றுக்கொள்ள முடியும்.

 தாய்லாந்து, மலேசியா,  இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்தே இந்த முள்ளுத்தேங்காய் உற்பத்திக்கான ஹைபிரைட்   விதைகள் (Hybrid Seeds) கொண்டு வரப்பட்டன. இவ்வாறான விதைகள் மூலமே இதன் உற்பத்தியை அதிகரிக்க முடியும். 

இதனை இலங்கையில் உற்பத்தி செய்தால் வருமானத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்பதுடன் எமது மக்களுக்கான தேவையும் பூர்த்தி செய்ய முடியும். ஆனால், பாம் எண்ணெயின் மூலம் நோய்கள் வரும் , அதனால் இயற்கைக்கு பாதிப்பு வரும் என்று கூறும் கருத்துக்களை ஏற்றுக்கொள்ள முடியாது. முள்ளுத்தேங்காய் பற்றி தெரியாதவர்களே இவ்வாறு கூற முடியும். ஆனால், நிலைமை அதுவல்ல. இன்று உலகளாவிய ரீதியில்   1.2 வீதத்தினோர் மாத்திரமே தேங்காய் எண்ணெயை பாவிக்கின்றனர். 39 சதவீதத்தினர் Palm Oil பாவிக்கின்றனர். என்றும் தனது ஆய்வின் மூலமாக பெற்ற  கருத்தைத் தெரிவித்தார். 

இது இவ்வாறிருக்க இத்துறை ஆபத்தானது என்று பல கட்டுரைகள், கருத்துக்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. அத்துடன் தெரணியகலை டெனிசெட் தோட்டத்தில் இத்துறை உற்பத்தி செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்தவாரம் இத்தோட்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். இப்போது முள்ளுத்தேங்காயின் விபரீதத்தை மக்கள் உணரத் தொடங்கியிருக்கின்றார்களோ எனவும் எண்ணத் தோன்றுகிறது.

முள்ளுத்தேங்காய் உற்பத்தி   செய்யப்பட்டுள்ள தோட்டப்பகுதிகளில் இயற்கையின் செழுமை  மங்கிவிட்டதாக குறிப்பிட்ட மாவட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். இது சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் அதேவேளை குறிப்பிட்ட பகுதிகளில் சிறிது காலத்திற்கு பின்னர் வறட்சியையும் எற்படுத்தி சூழலையும் மாசுபடுத்தி விடும் நிலைமையே ஏற்படு கின்றது.

இலங்கையில் கோப்பிச் செய்கையில் தோல்வி கண்டு அதற்கு மாற்றீடாக ஜேம்ஸ்டெய்லர் 150 வருட காலத்திற்கு முன்னர் பரீட்சார்த்தமாக பயிரிடப்பட்ட தேயிலைச் செய்கை வெற்றியடைந்து அதன் மூலம் எண்ணற்ற வருமானத்தை பெற்று வந்த நிலையில் தேயிலைத்துறை இன்று பெரிதும் வீழ்ச்சிகண்டு வருகின்றது. அதற்கு ஓரிரு காரணங்களை மாத்திரம் சொல்லி அமைதியாக இருந்து விடமுடியாது. உலக சந்தையில் முதலாம் தரத்தில் இருந்து இலங்கை தேயிலைக்கான கேள்வி (Demand)   தற்போது வீழ்ச்சி கண்டுள்ளது.  

முள்ளுத் தேங்காய் உற்பத்தி இடம்பெறும் இடங்களில் பசுமையான காடுகள் அழிக்கப்பட்டு இதனால் வனஜீவிகளும் தங்களது வாழ்விடங்களை இழந்துள்ள நிலைமையே இருக்கின்றது. உலக நாடுகளில் பாம் எண்ணெய்க்கு ஆதரவாகவும் எதிராகவும்  போக்குகள் காணப்படுகின்றது.

பொதுவாக சில ஐரோப்பிய  நாடுகளில்   பிரபல கடைகளில் 'எங்கள் கடைகளில் பாம் ஒயிலில் தயாரித்த பொருட்கள் எதுவும் விற்பனைக்கு இல்லை' என்பதை தமது விழிப்புணர்வைக் வெளிக்காட்டும் விளம்பரமாகவே வைத்துள்ளார்கள்' என்று ஆய்வாளர் ஒருவர் முகநூலில் குறிப்பிட்டிருந்ததை  அவதானித்தேன். மேற்கத்தைய நாடுகளில் இவ்வாறான விளம்பரங்களை பாம் எண்ணெய்க்கு ஏன் காட்சிப்படுத்த வேண்டும் என்பது சிந்திக்க வேண்டிய விடயம்.   


தேயிலையில் வீழ்ச்சி நிலை அதிகரித்துச் செல்லும் நிலையில் பாம் ஒயில் மாற்றீடாக குந்துவது  எந்தளவுக்கு சாத்தியமாகும்? . இதனால் பாதக விடயங்களுக்கு பதில் சொல்பவர்கள் யாராக இருப்பர்.

கோப்பிக்கு மாற்றீடாக தேயிலை, இறப்பர் இருந்த போது இயற்கை மேம்பட்டதுடன்  அதனால் வாழ்ந்தவர்களும் அதிகம். ஆனால், இந்த முள்ளுத் தேங்காய் வரும் போதே சூழல், சுகாதாரம் கலாசாரம் மீதான தாக்கத்தை உணர்த்தியவாறே வருகிறது. தேங்காய் உற்பத்தியில் முன்னணியில் இருந்து ஏற்றுமதி செய்த நமது நாடு தேங்காய் எண்ணெய்க்கு பதிலீடாக முள்ளுத்தேங்காய் எண்ணெய்யை உற்பத்தி செய்ய தலைப்பட்டிருப்பதும்   ,முள்ளுத்தேங்காய் வருமானம் தரும் துறை என்று தேயிலைக் கைத்தொழிலில் இருந்து கம்பனிகள் விலகி வருவதும்  கவலைக்குரியது. 

எது எவ்வாறெனினும் முள்ளுத்தே ங்காய் தொழிலுக்குள் தோட்டத் தொழிலாளர்கள் உள்வாங்கப்படும் விதம்  அவர்களை மேலும் மேலும் அடிமைப்படுத்தச் செய்யும் போக்கையே காட்டி நிற்கிறது. தேயிலைக்கு 150 வருடங்களைக் கொண்டாடவும் முடியாமல் புதிதாக வரும் முள்ளுத்தேங்காயை  கொண்டாடவும் முடியாமல் மக்கள் திண்டாடி நிற்கின்றனர்.

நன்றி - வீரகேசரி

You Might Also Like

0 comments

வருகை தந்தோர்

Like us on Facebook

Flickr Images