அழகுக்கலை நிபுணரும் ஒரு வைத்தியரே - ஜீவா சதாசிவம்

July 18, 2018



மத்திய மாகாணத்தில் கண்டியை தளமாகக் கொண்டு தனது எட்டாவது வருடத்தில் கால் பதித்துள்ள Sherin Beauty Academy நிலையத்திற்கும் இன்று (15.07.2018) டிப்ளோமா சான்றிதழ் பெறவந்துள்ள மாணவர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டு எனது சிற்றுரையை ஆரம்பிக்கின்றேன். 

பட்டப்படிப்புகளைவிட எளிதில் வேலைவாய்ப்பை பெற்றுத் தருவதாக பல  டிப்ளோமா கற்கை நெறிகள் இருக்கின்றன.   அழகுக்கலை உள்ளிட்ட சில  டிப்ளோமா படிப்புகள் வேலைவாய்ப்புடன், சுயதொழில் வாய்ப்புகளையும் கொண்டுள்ளன.   ஆண்டுதோறும் வளர்ச்சி கண்டுவரும் தொழில்களில் அழகுக்கலைக்கு முதலிடம் உண்டு. இலங்கையை பொருத்தமட்டில் அதிகளவான வருமானத்தை  ஈட.டி தரம் தொழிற்துறையாக அழகுக்கலைத் துறை இருக்கின்றது. 

அனைவரும் கல்வியறிவு பெற்ற இ்காலத்தில், அனைவரும் தங்களை அழகுப்படுத்திக்கொள்வதில் அதீத அக்கறை செலுத்துகின்றனர்.  ஆரம்பகா லங்களில் பெண்கள் மாத்திரம் இத்துறையில் ஈடுபட்டிருந்த   காலம் மாறி ஆண்களும்  அதிகளவில் இத்துறையில் தங்களை அதிகளவு உள்வாங்கும் நிலை காணப்படுகின்றது. இருபாலரும் இத்துறையில் ஈடுபட்டு செயல்பட்டு வருவது இத்துறை மீதான அங்கீகாரத்தையும் ஈர்ப்பையும் அதிகரிக்கச் செய்கின்றது. 

அழகுக்கலை மூலம் வருமானம் வருவது ஒரு புறம் இருக்க அதன் மூலம் வரும் பிரதி பலன்களுக்கும் பதில் கூறவும்தயாராக இருக்கின்றோமா என்றும் சிந்தித்துப்பார்க்க வேண்டும். 

அழகுக்கலை நிபுணர் என்பவர் வைத்தியருக்கு ஒப்பானவர். அழகுக்கலை நிபுணரிடம் வருபவர் வாடிக்கையாளராகவும் வைத்தியரிடம் செல்பவர்கள் நோயாளிகளாகவும் அடையாளப்ப டுத்தப்படுகின்றனர். ஒரு நோயாளியை வைத்தியர் உடல் உட்பாகங்களில் இருக்கும் நோயை அடையாளம் கண்டு சிகிச்சை அளிக்கிறார். ஆனால், அழகுக்கலை நிபுணர் அந்த உடற்பாகங்களை போர்த்தியுள்ள வெளிப்புற தோற் பகுதிகளுக்கே சிகிச்சை அளிப்பவராக இருக்கின்றார். 

ஒரு வாடிக்கையாளரை அணுகும் தொடுகை உணர்வு ஆங்கிலத்தில் அதனை ஹீலிங் என்பார்கள். தொடுகை உணர்வு இருக்க வேண்டும். அப்போது தான் அவர்களுக்கான முழுமையான சிகிச்சையை வழங்க முடியும்.  இக்காலத்தில் மேக்கப் இல்லாத பெண்களை காண்பது அரிது. மேக்கப் மூலம் எம்மை நாம் அழகுபடுத்திக்கொள்ளா விட்டால் சமூகம் நம்மை ஏற்றுக்கொள்ளாது என்ற எண்ணம் பலரிடத்திலும் ஏற்பட்டிருப்பதை காணலாம். 

உண்மைதான் ஆள் பாதி ஆடை பாதி என்று கூறிய காலம் மாறி ஆள் கால்வாசி ஆடை முக்கால்வாசி என்ற நிலைமையே தற்போது ஏற்பட்டுள்ளது.  இங்கு முக்கியமான விடயத்தை கூற விரும்புகின்றேன். வெளிபுற அழகுக்கு நீங்கள் கொடுக்கும் முக்கியத்துவம் உட்புறத்துக்கும் வழங்க வேண்டும். இவை  இரண்டும் சேர்ந்த்தே முழுமையான அழகு.

அழகுக்கலை படிப்பை பூர்த்தி செய்து இன்று டிப்ளோமா பட்டம் பெற்றுக் கொண்ட நீங்கள், எதிர்வரும் காலத்தில் அழகுக்கலை நிலையத்திற்கு அதிபராக வரவுள்ளீர்கள். மிகவும் சமூக  பொறுப்புடன் செயற்பட வேண்டியவர் களாகவும் இருக்கின்றீர்கள். 

உதாரணமாக நீங்கள் ஒரு அழகுக்கலை நிலையத்தை ஆரம்பித்தால், முதன் முதலில் கண் புருவத்தை (ஐப்புரோ சேப்) சரி செய்வதற்காக வரும் வாடிக்கையாளர்களே பின்னாளில் பெரியளவிலான சிகிச்சை  முறைக்கும் உங்களிடமே வருமளவிற்கு அவர்களுக்கு சேவை வழங்கவேண்டும். நகர்ப்புறங்கள் மட்டுமல்லாது கிராமப்புறங்களிலும்கூட நாகரீக வளர்ச்சி, உடல் அழகு பேணும் போக்கு மேம்பட்டுக் கொண்டுதான் வருகிறது. 

அழகுக் கலை என்பது வெறுமனே நகப்பூச்சு போடுதல், மெழுகுப்பூச்சு போடுதல், கூந்தலை சரி செய்தல் என்பது மட்டுமல்ல. முகம் அழகு படுத்துதல், சருமத்தை சீர்படுத்துதல், ஊட்டச்சத்து மேம்பாடு, உடை மேம்பாடு, விருந்தோம்பல் முறை என பலவற்றைப் பற்றியும் படிக்கும் வாய்ப்பு உண்டு. அழகுக் கலை படிப்பை முடித்ததும் உங்கள் கையில் ஒரு தொழில் இருப்பதாக பெருமிதத்துடன் இருக்கலாம். சுயதொழில் வாய்ப்பு மட்டுமல்லாமல் அழகுக் கலை படிப்பு படித்தவர்களுக்கு பல துறைகளிலும் வாய்ப்புகள் இருக்கிறது.

 அழகு என்பது வெறும் தோற்றத்தில்  இல்லை. நல்லா எண்ணங்களும் கபடமற்ற மனதும் அக அழகுக்கு எப்படி அவசியமோ அதே போல புற அழகுக்கும் அவசியமாக இருக்கின்றது. அழகு நிலையங்களும் ஆங்காகங்கே உருவாகிக் கொண்ட இருக்கின்றது.  சகல தரப்பினரும் தங்களை வித விதமான முறையில் அழகுப்படுத்திக் கொள்வதில் முன்னிலை வகிக்கின்றனர்.

இன்று அழகுக்கலை நிலையங்கள் பரந்தளவில் வியாபித்துக் காணப்படுகின்றது. சிலர் ஒரு வாரம் அழகுக்கலை பயிற்சி செயலமர்வுக்கு சென்று பயிற்சி எடுத்தவிட்டு  பின்னர் அடுத்த கிழமை அழகுக்கலை நிலையமொன்றை திறந்துவிடும் நிலைமையையும் காணக்கூடியதாக உள்ளது. 

பட்டப்படிப்பு முடித்தாலும் அத்துறை சார் அனுபவத்துடன்  துறைக்குள் செல்வதுதான் சிறப்பு. கல்வித்தனகமையுடம் தொழிற்தகைமையும் இணைந்தால் மாத்திரமே முழுமையானதாக இருக்கும். குறிப்பிட்ட துறைசார் விடயத்திலும் வெற்றியடைய முடியும். 

வைத்தியருக்கு ஒத்ததான இத்துறையை தெரிவு செய்பவர்கள் சமூக பொறுப்புடனும் அக்கறையுடனும் செயற்பட்ட வேண்டியது அவசியம். நல்லதொரு துறையை தெரிவு செய்து அதனை திறம்பட கற்று விருது பெறும் மாணவர்கள் அனைவரும் எதிர்காலத்தில் சிறந்து விளங்கி மேலும் இத்துறையை சரியான பாதையில் கொண்டு நடத்துவீர்கள் என வாழ்த்துகின்றேன். 

15.07.2018


You Might Also Like

0 comments

வருகை தந்தோர்

Like us on Facebook

Flickr Images