மலையக வீடமைப்பு: மேற்கிளம்பும் இனவாதம் - ஜீவா சதாசிவம்

June 22, 2017


இனவாதம் தொடர்ச்சியாக தலைவிரித்தாடும் இலங்கையில் அதன் வளர்ச்சிவேகம் குறைந்த பாடில்லை. அதுவும் பாரதப்பிரதமரின் இலங்கை விஜயத்தின் பின்னர் எழும் பல இனவாத கருத்துக்கள் இந்நாட்டில் எப்போதும் ஒரு சமாதானத்திற்கான வழி இல்லை என்பதற்கு எச்சரிக்கை விடுப்பதாக  இருக்கின்றது. இதன் வாதப்பிரதிவாதங்கள் தென்னிலங்கையில் தலைவிரித்தாடுகின்ற நிலையில் அது பற்றி நாளுக்கு நாள் பலதரப்பட்ட கருத்துக்கள்  உருவகித்து வெளிப்படுத்தப்படுகின்றன.

பாரதப்பிரதமரின் மலையக விஜயத்தின் போது அறிவித்த கருத்துக்கள் கொழும்பு அரசியலிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பத்தாயிரம் வீடுகள் உட்பட இதர சில விடயங்களை மலையகத்துக்கு வழங்குவதாக அவரது அறிவித்தலின் பின்னர் பல  இனவாதிகள் தமது கருத்துக்களை கக்க தொடங்கி விட்டனர். இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்திய வம்சாவளியினரான மலையகத்தமிழ் மக்களுக்கு பல்வேறு உதவிகளையும் அவர்களின் அடிப்படை அரசியல் இருப்புக்களையும் பெற்றுக்கொடுக்க வேண்டிய தார்மீக  பொறுப்பும்  கடப்பாடும் இந்தியாவிற்கு இருக்கின்றது.

மலையக மக்களின் இருப்பினை கேள்விக்குறியாக்கிய ஸ்ரீமா –  சாஸ்தரி ஒப்பந்தத்தின் பின்னர் மலையகத் தமிழ் மக்கள் இந்நாட்டில் சனத்தொகையில் இரண்டாவது இடத்திலிருந்து  நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்ட விடயம் யாவரும் அறிந்ததே. அந்த ஒப்பந்தமே  அம்மக்களின் அரசியல் இருப்பினை கேள்விக்குறியாக்கியதுடன் இன அடையாளத்தையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. இம்மக்கள் இன்று இலங்கையில் இருந்தாலும் இவர்கள் இலங்கைத் தமிழர்களாக முழுமையாக இன்று அங்கீகரிகப்பட்டுள்ளார்களா? இப்படி பல தரப்பட்ட கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகலாம். இது இவ்வாறிருக்க பாரதப்பிரதமரின் வருகையின் பின்னரான சில விடயங்களைப்பற்றி இக்கட்டுரையில் குறிப்பிடுகின்றேன்
''பாரதப் பிரதமர் மோடி மலையகத்துக்கு வருவதனால் மாத்திரம் எல்லாம் நடந்துவிடுமா?''. இவ்வாறானதொரு கேள்வி அவர் இலங்கை வருமுன் பலரது மனதிலும் எழுந்தது. அது பற்றிய கருத்து பரிமாற்றங்கள் வலைத்தளங்கள், சமூக ஊடகங்களிலும் ஆதிக்கம் செலுத்தின. ஆனால், அவரது விஜயத்தின் பின்னரே 'மலையகம்'  இன்று சர்வதேசரீதியில் பேசும் அளவுக்கு வந்துள்ளதனை கடந்தவாரத்தில் இந்தியாவில் உள்ள பிரபல ஊடகங்களில் மலையகம் தொடர்பாக வெளியான பல கட்டுரைகள், நேர்காணல்கள் என்பன வெளிப்படுத்தின.
ஏன்? உள்ளூரில் உள்ள ஆங்கில ஊடகங்களில் கூட மலையகம் பற்றியதான விடயம் அழுத்தமாக பிரசுரிக்கப்பட்டிருந்தது.

எப்படியோ ஒரு பெருந்தலைவரின் வரலாற்று முக்கியத்துவமிக்க விஜயத்தினால்  இவ்வளவு காலமும் 'பின்தங்கிய' சமூகமாக பேசப்பட்டு வந்த மலையகம் வெளி உலகுக்கும் கொண்டு வரப்பட்டுள்ளது.

அந்த பின்தங்கிய சமூகத்தின் வளர்ச்சி குறித்து அவர்களின் நலன் குறித்து அதிகளவு கரிசனை கட்ட வேண்டிய இந்தியா பல அறிவிப்புக்களை விடுத்துள்ளமையானது இங்குள்ள இனவாதிகளுக்கு பெரும் வாதமாகவே இருந்துவிட்டது. இதே அறிவிப்பினை தெற்குக்கு அறிவித்திருந்தால் அவர்களின் மனம் எப்படி குளிர்ச்சியடைந்திருக்கும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டிய ஒரு தேவையும் இங்கு எழுகிறது. ஆனால், இந்த அறிவிப்பின் பின்னர், ''தெற்கிற்கு உதவினால் சகோதரத்துவம் ,மலையகத்திற்கு உதவினால் இனவாதம்'' எனும் தொனியில் கருத்துக்கள் வெளியாகின்றன. பொதுவாக தமிழர்களுக்கு வெளிநாடுகள் கரிசனை காட்ட முனையும் போது தென்னிலங்கை கொதித்தெழும்புவது புதிதான விடயமும் அல்ல.

மலையகத்துக்கான பத்தாயிரம் வீடுகள், இதர வசதிகள் வழங்குவது பற்றி மோடியின் அறிவிப்பின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் கம்மன்பில கூறிய கருத்துக்கு அமைச்சர் மனோகணேசன் விடுத்திருந்த அறிக்கையின் ஒரு பகுதியை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும் ''மோடி, மலையகம் சென்று, தோட்டத் தொழிலாளர்களுக்கு 10,000 வீடுகளை அமைத்து தர உறுதியளித்துள்ளார். அதேபோல், இலங்கையில், இந்தியா ஏற்கனவே வழங்கிவரும் இலவச அம்புலன்ஸ் என்ற மருத்துவ வாகன வசதியை இன்னும் ஏழு மாகாணங்களுக்கு விஸ்தரிப்பது தொடர்பாகவும் அறிவித்துள்ளது.  இவை பற்றிய பின்னணிகளை அறியாமல், புரிந்துகொள்ள முயற்சி செய்யாமல், இத்தகைய அறிவிப்புகளை செய்ய நரேந்திர மோடி யார்? இலங்கை இந்தியாவின் 30ஆவது மாநிலமா? என்ற கேள்விகளை எழுப்பி, அதன்மூலம் இவற்றுக்கு தவறான அர்த்தங்களை கற்பித்து, சிங்கள மக்களை தூண்டிவிடும் முகமாக, இனவாத பைத்தியம் பிடித்த நிலையில் கூட்டு எதிரணி எம்.பி உதய கம்மன்பில பேசி வருகிறார்'' என்று அமைச்சரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

பாரதப்பிரதமரின் விஜயத்தின் பின்னர்  சிங்கள பத்திரிகைகள், சமூக ஊடகங்களில் பெரும்பான்மை தரப்பினரால் விடுக்கப்பட்ட  கருத்துக்கள் அவர்கள் எவ்வாறான ஆத்திரத்தில் இருக்கின்றார்கள் என்று எண்ணிக்கொள்ளலாம். முஸ்லிம்களுக்கு அரபு நாடுகள் வீடுகள் கட்டிக் கொடுக்கின்றன, வடக்கு கிழக்கிலுள்ளவர்களுக்கு டயஸ்போரா காரர்கள் கட்டிக் கொடுக்கிறார்கள், மலையகத்தவர்களுக்கு இந்தியா கட்டிக்கொடுக்கிறது. சிங்களவர்களுக்கு இப்படியொரு அநியாயம் நடக்கிறது என்பதையும் இத்தளங்களில் சுட்டிக்காட்டத்தவறவில்லை.

இதுவரை இந்தியா இலங்கைக்கு வழங்கிய உதவி நடவடிக்கைகளில் மலையகத்துக்கு எவ்வளவு வந்து சேர்ந்தது என்று மலையகத்தில் இருந்து கேள்வி தான் எழுப்பியிருக்கிறோமா...? ஆம்!!! பத்தாயிரம் வீடுகள் குறித்து பேசுவதற்கு முன்பு இதுவரை இந்தியா இலங்கைக்கு எவ்வாறான உதவிகளை வழங்கியுள்ளது என்பது பற்றி குறிப்பிட வேண்டிய தேவையும் இங்கு எழுந்துள்ளது.

யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களுக்கு 458 மில்லியன் அமெரிக்க டொலர், இந்திய வீடமைப்புத்திட்டத்திற்கு 1372 கோடி இந்திய ரூபாய்கள். (இதில் 46,000 வடக்கு, கிழக்கு பகுதிக்கு – 4000 மலையகப் பகுதிக்கு) நடைபெறும் திட்டங்கள், யாழ்ப்பாணத்தில் கலாசார மத்திய நிலையம், திருக்கேதீஸ்வரம் ஆலயத்தினை புனரமைத்தல், வடக்கு, கிழக்கு பகுதியில் 3000 மழை நீர் சேமிப்புத்திட்டம், யுத்தத்தின் பின்னர் வடக்கிற்கான இரயில் பாதை புனரமைப்பு, சுனாமியின் பின்னர் தெற்கிற்கான இரயில் பாதை புனரமைப்பு, யாழ்ப்பாணத்தில் கைவினைப்பொருட்களின் உற்பத்தியை செய்யும் கிராமங்களை விருத்தி செய்தல், மட்டு. போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை பிரிவு ஒன்றை அமைத்தல், இலங்கை மாணவர்களுக்கு இந்தியாவில் புலமைப்பரிசில் பரீட்சை (இதில் சிங்கள மாணவர்களும் அடக்கம்), மாத்தளை, மகாத்மா காந்தி நிலையம், மேல்மாகாணத்திற்கு மாத்திரம் இந்தியா வழங்கி வந்த அம்புலன்ஸ் சேவைத் திட்டம் இப்போது எல்லா மாகாணங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

றுஹுணு பல்கலைக்கழகத்தில் ரவீந்திரநாத் தாகூரின் பெயரில் கேட்போர் கூடம், அம்பாந்தோட்டையில் கைவினைப்பொருட்களின் உற்பத்தியை செய்யும் கிராமங்களை விருத்தி செய்தல், அம்பாந்தோட்டையில் மீன்பிடி உபகரணங்கள் மற்றும் சைக்கிள்கள் போன்றவற்றை வழங்கிவைத்தமை, பொலனறுவையில் பல்லின மாணவர்கள் கற்கும் பாடசாலை ஒன்றை விருத்தி செய்தல் இந்த திட்டங்களுடன் ஒப்பிடும்போது மலையகத்திற்கான 10000 வீடுகள் என்பது இந்திய உதவித்திட்டத்தின் சிறு பகுதியே..

இந்தியா இலங்கையில் காலங்காலமாக  தனது உரித்தை நிலைநாட்டவும் தனது கையை வைத்திருப்பதற்கும் இலங்கையின் பிரச்சினைகளை கையாண்டு வந்திருக்கிறது. யுத்தத்தின் பின்னர் இப்போது மீண்டும் மலையகத்தில் இந்தியா நுழைந்திருக்கிறது, மலையகத்துக்கு வந்த முதலாவது இந்தியப் பிரதமர் மோடி. நேரு இலங்கை வந்திருந்த போது அவர் பிரதமராக இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது. தனது பிடியை வைத்திருக்க வேண்டுமென்றால் முழுமையாக அந்த பிரச்சினையை இந்தியா தீர்க்கவும் விரும்பாது. தீர்க்க விரும்பியதும்  இல்லை. எனவே தான் இந்தியா மலையக விடயத்திலும் இம்முறை நிரந்தர அரசியல் தீர்வு விடயம் குறித்து ஒன்றும் பண்ணவுமில்லை. அதற்கான சிறு சமிக்ஞையைக் கூட காட்டவுமில்லை. ஆனால், நிவாரண விடயங்களில் அது கவனம் செலுத்தியிருக்கிறது.
காலங்காலமாக இந்த நிவாரண அரசியலுக்குள் சிக்கித் தவித்து, அடிப்படை அரசியல் தீர்வை அடுத்தடுத்த நிலைக்கு தள்ளிய கைங்கரியத்தை மலையக அரசியல் தலைவர்களும் காலங்காலமாக செய்து வந்திருக்கிறார்கள். “நிவாரண அரசியலுக்கு” மலையக மக்கள் பழக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை இந்தியாவும் நன்றாக தெரிந்துதான் வைத்திருக்கிறது. அது மக்கள் மத்தியில் எவ்வாறான வரவேற்பை கொடுக்கும் என்பதையும் அறிந்து வைத்துள்ளது.

ஏன், அதற்கான தேவையும் இருக்கவே செய்கிறது. ஆனால், அதைத் தாண்டி ஏன் இந்தியாவால் எதையும் செய்ய முடிவதில்லை என்பதே நமக்கு இருக்கும் அடுத்த கேள்வி. பேரினவாதமயப்பட்ட இலங்கையின் அரசியல் இயந்திரம் மலையக மக்களுக்கு இத்தனை காலம் செய்து கொடுக்காததைத் தான் இன்னொரு நாடு வந்து செய்து தந்து போயிருக்கிறது.
சிங்கள மக்களின் வரிப்பணத்தில் அல்ல இந்த வீடு, ஆஸ்பத்திரி, கல்வி போன்ற அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்படுகின்றன என்பதையும் பேரினவாத சக்திகளுக்கு நினைவுறுத்த வேண்டியிருக்கிறது.

மலையகத்தில் நிலவும் உயர்தர பாடங்களுக்கான கணித, விஞ்ஞான பிரிவுக்கான பட்டதாரி ஆசிரியர் பற்றாக்குறையின் காரணமாக இந்தியாவிலிருந்து தருவிக்க கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் கோரியிருந்தார். மோடி விஜயம் செய்த காலத்திலேயே இந்த செய்தியும் வெளியாகியிருந்ததால் ஒட்டுமொத்த இந்திய எதிர்ப்பு வாதத்துடன் இதனையும் இனவாதிகள் சேர்த்துக் கொண்டார்கள். இந்தியாவின் காலணியாக இலங்கையை ஆக்கிவிடுவதில் மலையகத் தலைவர்கள் எத்தனிக்கிறார்கள் என்றும் பிரச்சாரம் செய்யப்பட்டது.

இலங்கையின் அரசியல் இயந்திரம் மலையக மக்களையும் சமத்துவமாக நடத்தியிருந்தால் ஏன் இந்த உதவிகளை ஏற்க வேண்டும். சாதாரண அடிப்படை உரிமைகளுக்காகவும் போராடிக்கொண்டே இருப்பதை வாழ்க்கையாகக் கொண்ட மக்களின் முன் உள்ள தெரிவு தான் என்ன. நாட்டில் சுதந்திரக் கல்வி ஆரம்பிக்கப்பட்டு 70 வருடங்கள் ஆகியும் அதன் உள்ளடக்கத்தை மலையகம் எட்டுவதற்கு பல ஆண்டுகள் போராட வேண்டியிருந்தது. இன்றும் மலையகத்துக்கு முழுமையாக போய் சேரவில்லை. இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். 

பாரதப்பிரதமர் மோடியின் இலங்கை விஜயம் வெசாக் நிகழ்வுகளை மையப்படுத்தி அமைந்தது. மலையக விஜயம் இரண்டாம்பட்ச நிகழ்ச்சிநிரல் தான். இந்த பயணம் நேரடியாக மலையகத்தை மட்டுமே மையப்படுத்தி நிகழ்ந்திருந்தால். அதன் அரசியல் விளைவுகள் வேறு மோசமான வடிவத்தைத் தந்திருக்கும் என்பதை இப்போது எழும் இனவாதக் கருத்துக்கள் மூலம் அறியலாம்.

மோடியின் வருகையை ஏற்கனவே எதிர்க்கத் தொடங்கியிருந்தார்கள் இந்திய எதிர்ப்பு பெரும்பான்மை சக்திகள். இந்தியாவோடு மேற்கொள்ளவிருக்கும் ஒப்பந்தங்கள் உட்பட பலதரப்பட்ட விடயங்களையும் கறுப்பு கலரை மையப்படுத்தி கருத்துக்களை தெரிவித்தார்கள். ஆனால், இறுதியில் நடந்தது ஒன்றுமில்லை.

இதனை கடந்த வாரங்களில் பல செய்திகள் வெளிப்படுத்தியிருந்தன.  இந்த இனவாத நோக்கம் இருக்கும் வரைக்கும் இலங்கை அரசியலில் எந்தவொரு சமாதானத்துவத்தையும் உருவாக்க முடியாது. இனவாத பேச்சுக்காக விஜயன் இந்தியாவில் இருந்து வந்தார் என்று மகாவம்சம் குறிப்பிட்டிருப்பதையே பொய் என ஞானசார தேரர் சொல்வதற்கு கூட தயங்கவில்லை என்பதை அண்மையில் அமைச்சர் மனோவுடனான வாக்குவாதத்தில் அப்பட்டமாக வெளிப்படுத்தியிருந்தார்.

குறுகிய அரசியல் இலாபத்துக்காக எழும் தொடர் இனவாத பார்வையின் கண்ணோட்டமே தொடர்ச்சியாக இந்த நாட்டை இதே நிலைமையில் வைத்திருப்பதற்கும் சமாதானமற்ற நாடாகவும் ஒரு இன வன்முறைக்கான அறிகுறியாக தொடர்ச்சியாக தெரிகின்றது.

இந்நிலைமையின் உச்ச கட்டம் கடந்த ஆட்சியில் இருந்தமையினாலேயே அந்த ஆட்சி ஆட்டம் கண்டதுடன் அதன் விளைவாக மாற்றமும் ஏற்பட்டது. இந்த ஆட்சியிலும் இந்நிலை தொடர்வதை இந்நல்லாட்சி அனுமதிக்குமானால் கடந்த ஆட்சியில் இருந்து எந்த விதத்திலும் மாறுபட்டதாக இந்த ஆட்சி அமையாது.

நன்றி - வீரகேசரி

You Might Also Like

0 comments

வருகை தந்தோர்

Like us on Facebook

Flickr Images