உண்மையில் ம.ம.மு. செயலாளர் யார்? - ஜீவா சதாசிவம்

June 15, 2020


மலையக மக்கள் முன்னணியின் பிரதிப்பொதுச்செயலாளராக இருந்த அனுஷா சந்திரசேகரன் அப்பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட விடயம் இப்போது பேசுபொருளாகியுள்ளது. உண்மையில் இந்த பிரதிப்பொ துச்செயலாளர் பதவியில் இருந்து அனுஷா விலக்கப்பட்டாரா? அவ்வாறு விலக்கப்பட்டதனை அவரே ஏற்றுக்கொண்டாரா என்பது பற்றிய விடயங் களை கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான வே. இராதாகிருஸ்ணன் தெரிவிக்கும் கருத்துகள் என்ன?

பிரதிப் பொதுச்செயலாளராக இருந்த அனுஷாவை தீடீரென பதவி நீக்கம் செய்ததற்கான காரணம் என்ன?

திடீரென அவரை நாம் பதவி நீக்கம் செய்யவில்லை. அவரை பதவியிலிருந்து இடைநிறுத்தம் செய்து ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்போவதான அறிவித்தல் கடிதமொன்றை 11/05அன்று அவருக்கு அனுப்பிவைத்தோம். ஒரு கட்சியில் பொறுப்பான பதவியில் இருக்கும் அவர் கட்சியின் யாப்பு விதிகளை மீறி புறம்பாக செயற்பட்டமையினாலேயே இவ்வாறு ஒழுக்காற்று விசாரணைக்காக பதவியிலிருந்து இடைநீக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அவரை விசாரணை செய்வதற்காக சட்டத்தரணி ஒருவருடன் கூடிய  மூவர் அடங்கிய குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்திற்கு அனுஷா பதில் அனுப்பினாரா?

ஆம்! நாங்கள் கடந்த மே மாதம் 11ஆம் திகதி அனுப்பிய கடிதத்திற்கு 25ஆம் திகதி எமக்கு பதில் தந்தார். அந்த கடிதத்தில் கட்சி யாப்பின் குறிப்பிட்ட ஒரு சரத்தை சுட்டிக்காட்டி அந்த சரத்திற்கு அமைவாக என்னை பதவி நீக்கம் செய்ய முடியாது என்று பல விடயங்களை குறிப்பிட்டு தனது பக்க நியாயங்களைச் சொன்னார். மார்ச் 19வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து மூன்று மாதங்களுக்கு பின்னர் இவ்வாறு ஒரு அறிவிப்பை விடுத்திருப்பதன் நோக்கம் என்ன?

அனுஷா வேட்பு மனு தாக்கல் செய்த பின்னரே அவர் தனித்து போட்டியிடுவது உறுதியானது. 2017ஆம் ஆண்டு அவர் மலையக மக்கள் முன்னணியில் பொறுப்பான பதவியை  ஏற்றார். அதன்போது, தொடர்ச்சியாக கட்சியில் அனுபவங்களைப் பெற்றபின்னர் மத்திய மாகாண சபையில் அவரை களமிறக்குவதற்கு கட்சி தீர்மானித்தது. ஆனால்,  அவர் பாராளுமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுவார் என நாம் எண்ணவில்லை.

அவர் சுயேச்சையாக களமிறங்கிய தீர்மானம் உறுதியான பின்னர் கட்சியின் நிர்வாகக் குழு ஒன்றுகூடி பேசி தீர்மானமொன்றை எடுத்தது. ஏனெனில் ஒரு கட்சிக்கு செயலாளரின் செயற்பாடு மிகவும் முக்கியம். அந்தவகையில், எமது கட்சி தேர்தலில் போட்டியிடும் போது, தனித்து சுயேச்சையாக போட்டியிடும் அனுஷா எமது கட்சி வேலைகளில் ஈடுபட முடியாது.

உண்மையில் கட்சி யாப்பு விதிகளுக்கு அமைவாக கட்சியில் இருக்கும் ஒருவர் இவ்வாறு சுயேச்சையாக இயங்கும் போது கட்சியில் பொறுப்பான பதவியில் செயற்படுவதற்கு  அனுமதிக்க முடியாது. ஆகையால்,  அவருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் உயர் மட்ட உறுப்பினர்களின் தீர்மானத்திற்கு அமைவாக பேராசிரியர் விஜயசந்திரனை பிரதிப்பொதுச் செயலாளராக நியமித்தோம்.

விஜயசந்திரன் கட்சிக்கும் இந்தப்பதவிக்கும் புதியவர் அல்ல. அவர் நீண்டகால உறுப்பினர் என்பதுடன் இவர் வகித்த பிரதி பொதுச்செயலாளர் பதவியையே 2017ஆம் ஆண்டு அனுஷாவின் அரசியல் பிரவேசத்தையடுத்து அவருக்கு விட்டுக்கொடுத்திருந்தார். கட்சி யாப்பை மீறி சுயமாக செயற்பட்டதால் கட்சியில் இருந்து இடைநிறுத்தம் செய்யபட்டு ஒழுக்காற்று நடவடிக்கை தொடரும் என நாம் ஏற்கனவே அவருக்கு கடிதம் மூலம் அறிவித்துவிட்டோம்.

பதவியில் இருந்து விலக்கியதை எதிர்த்து வழக்குத்தாக்கல் செய்வதாக தெரிவித்திருக்கிறார் இது பற்றி உங்கள் கருத்து?


அவர் ஒரு சட்டத்தரணி. கட்சியின் யாப்பு விதிகள் பற்றி அனுஷா நன்கறிவார். அதற்கமைவாகவே நாம் செயற்பட்டோம். வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக அவர் அறிவித்திருக்கின்றார். அவர் எந்த அடிப்படையில் வழக்குத்தாக்கல் செய்தாலும் நாம் முகங்கொடுக்கத் தயாராக இருக்கின்றோம்.

விஜயசந்திரன் தொடர்ச்சியாக இப்பதவியில் நிலைப்பாரா?

விஜயசந்திரன் ஏற்கனவே பிரதிப்பொதுச் செயலாளராக பதவி வகித்தார். தான் நிதிச்செயலாளராக பதவி வகிப்பதாகக் கூறி அனுஷாவின் அரசியல் பிரவேசத்தின் போது தான் வகித்த பதவியை விட்டுக்கொடுத்தார். செயலாளராக அனுஷா தெரிவு செய்யப்பட்டிருந்தாலும் கட்சி கூட்டங்களுக்கு சமூகமளிப்பதில்லை. கட்சி வேலைகள் இடம்பெறாத நிலையில் வேறு ஒருவருக்கு இப்பதவியை கொடுப்பதை விட ஏற்கனவே பதவி வகித்தவருக்கே இதனை வழங்குவது சிறப்பானது எனத் தீர்மானித்தே வழங்கப்பட்டது.

தேர்தல் நெருங்கும் காலத்தில் இவ்வாறு பதவி மாற்றம் செய்திருப்பது உங்களது வாக்கு வங்கியைப் பாதிக்காதா?

மக்கள் தான் அதைனை தீர்மானிக்க வேண்டும். நாங்கள் மக்களுக்கு எங்கள் கட்சியினுடாக பல சேவைகள் செய்துள்ளோம். அது மட்டுமல்லாது கட்சி உயர் பீடத்தில் இருந்தோ  அல்லது உறுப்பினர்களோ அனுஷா பதவி விலக்கப்பட்டால் தாமும் விலகுவதாகக் கூறி என அவர் பின்னால் செல்லவில்லை. கட்சியின் அங்கத்தவர்கள் எப்போதும் எம்முடனேயே இருக்கின்றனர். வாக்கு வங்கியில் சிறு எண்ணிக்கை வித்தியாசம் ஏற்பட்டாலும் நான் நிச்சயமாக வெற்றி பெறுவேன்.

ஸ்தாபகத் தலைவரின் மகளையே கட்சியில் இருந்து நீக்கியுள்ளார்கள் என பரவலாகப் பேசுகின்றனர். இதற்கு உங்களது பதில் எவ்வாறானதாக இருக்கும்.?

அமரர் சந்திரசேகரன் ஸ்தாபகத் தலைவராக இருந்தாலும் அவரது  குடும்ப அங்கத்தவர்கள் தான் கட்டாயமாக கட்சியின் பொறுப்பான பதவியில் இருக்க வேண்டும் என்ற யாப்பினை அவர் உருவாக்கவில்லை.

அது அவரது பெருந்தன்மையைக் காட்டுகிறது. நானும் வேறு கட்சியில் இருந்து தெரிவான பாராளுமன்ற உறுப்பினராகவே மலையக மக்கள் முன்னணியில் இன்று தலைமைப்பதவியில் இருக்கின்றேன். எனவே கட்சிக்கு முரணாக செயற்பட்டால் அது யாராக இருப்பினும் யாப்பின் படியே நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

*******************************************************************************
மலையக மக்கள் முன்னணியின் பிரதிப்பொதுச்செயலாளராக இருந்த அனுஷா சந்திரசேகரன் அப்பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட விடயம் இப்போது பேசுபொருளாகியுள்ளது. உண்மையில் இந்த பிரதிப்பொ துச்செயலாளர் பதவியில் இருந்து அனுஷா விலக்கப் பட்டாரா? அவ்வாறு விலக்கப்பட்டதனை அவரே ஏற்றுக்கொண்டாரா என்பது பற்றிய விடயங்களை பிரதிபொதுச் செயலாளராக இருந்த அனுஷா சந்திரசேகரன் தெரிவிக்கும் கருத்துகள் என்ன? 
கடந்த மூன்று வருடகாலமாக நீங்கள் வகித்து வந்த பிரதிப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீங்கள் விலக்கப்பட்டுள்ளீர்கள் இது தொடர்பில் உங்கள் கருத்து.?
ஆம்! எனக்கு கட்சியின் உயர் பீடத்தில் இருந்து கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப் பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் அந்த கடிதம் கிடைக்கப்பெற்றது. யாப்பு விதிகளுக்கு அமைவாகவே நான் செயற்படுகின்றேன். ஆகையால், நான் விதிமுறைகளை மீறியுள்ளேன் என்று யாராலும் கூறமுடியாது. நான் இப்போதும் பிரதிச்செயலாளர் நாயகமாக இருக்கின்றேன்.
யாப்பு விதிகளுக்கு அப்பால் தன்னிச்சையாகவே நீங்கள் செயற்படுவதாக ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது இது பற்றி?
எனக்கு அனுப்பப்பட்ட கடிதம் கட்சியின் யாப்பு விதிகளுக்கு அமைவாகவோ  அதில் உள்ள சரத்துக்களில் உள்ளவாறோ எனக்கு அனுப்பப்படவில்லை. அவர்கள் அனுப்பிய கடிதத்திற்கான பதில் கடிதத்தையும் நான் அனுப்பிவிட்டேன். நான்  தேர்தலில் தனித்து இயங்குவதாக அறிவித்து இற்றைக்கு மூன்று மாதங்கள் கடந்துள்ளன. இந்த கொரோனா காலப்பகுதியிலும் நான் மலையக மக்கள் முன்னணியின் பிரதிப் பொதுச்செயலாளராகவே என்னை அடையாளப்படுத்தி வந்துள்ளேன். இக்காலப்பகுதியில் எனக்கு ஆதரவாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதைக் கண்டு  அஞ்சியே என்னை பதவியில் இருந்து நீக்கம் செய்வதற்கு தீர்மானித்துள்ளனர்.  நான் எனது  தந்தை உருவாக்கிய கட்சியின் பெயரை பலப்படுத்தும் வகையிலேயே செயற்படுகின்றேன்.
நீங்கள் எப்படி அவ்வாறு கூறுகின்றீர்கள்? 2015ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழ் முற்போக்கு கூட்டணியுடன் இணைந்தே உங்களது கட்சியும் இருக்கின்றது அல்லவா?
2015ஆம் ஆண்டு தேர்தலில் கூட்டணியாக போட்டியிட்டது வரவேற்கக் கூடிய விடயம். மலையகத்தில் தலைவர்கள் கூட்டாக இருப்பதை நான் எதிர்க்கவில்லை. மலையக மக்கள் முன்னணியைச் சார்ந்தவர்கள்  கூட்டணியாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர் இந்த ஐந்து வருடகாலப்பகுதியில் என்ன செய்திருக்கின்றார்கள். மலையக மக்கள் முன்னணி என்ற கட்சியின் பெயரை வெளிக்கொண்டு வந்துள்ளார்களா?அவர்கள் கட்சியின் மண்வெட்டி சின்னத்தையே இல்லாது செய்துள்ளனர் என்பதை நான் இங்கு வெளிப்படையாக கூறுவேன்.
 கட்சிக்கு அங்கத்தவர்களை சேர்ப்பதற்கு மாத்திரமே எனது தந்தையின் உருவப் படத்தையும் எமது கட்சியின் சின்னத்தையும் பயன்படுத்துகின்றார்கள் என்பதை இங்கு என்னால் பகிரங்கமாகக் கூறமுடியும். கூட்டணியை முன்னிறுத்தி செயறபட்டமையினாலே எமது கட்சியான மலையக மக்கள் முன்னணியின் தொழிற்சங்க பலம் இன்று உடைத்தெறியப்பட்டுள்ளது. இந்த கூட்டணியை தேர்தலுக்கான கூட்டணியாகவே நான் பார்க்கின்றேன். எமது மலையக மக்கள் முன்னணியை பலப்படுத்தி அதன் சின்னத்தை என்வசம் எடுப்பேன்.
வெற்றி பெற்றபின்னர் கூட்டணியாக இணைந்து கட்சி சார்பின்றி வீட்டு வசதிகள் உட்பட பல அபிவிருத்தி வேலைகளை முன்னெடுத்துள்ளார்கள். இதனை இல்லை என மறுக்கின்றீர்களா?
அவர்கள் மலையகத்தில் வீட்டுத்திட்டங்களை செய்தார்கள் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால், அதனை யாருக்கு செய்தார்கள் என்பதே இங்கு எழும் கேள்வியாக இருக்கின்றது. கட்சி சார்பாகவே வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டன. வீடில்லாமல் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு வழங்கவில்லை. உண்மையில், மலையக மக்கள் முன்னணியாகிய எங்களது கட்சியில் இருக்கும் வீடுகள் தேவையான கட்சி அங்கத்தவர்களுக்கு கூட வீடு வழங்கப்படவில்லை என்பதும் கவலையளிக்கிறது. 
நேரடியாக பாராளுமன்ற தேர்தலில் களமிறங்குவதற்கான காரணம்?
மலையக மக்களுக்கு முழுமையாக சேவை செய்ய வேண்டுமாயின் பாராளுமன்றத்துக்கு சென்றால் மாத்திரமே சாத்தியமாகும்.

நன்றி - தினகரன்  (14/06/2020)


You Might Also Like

0 comments

வருகை தந்தோர்

Like us on Facebook

Flickr Images