'கரிகாற்சோழன்' விருது பெறும் தெளிவத்தை ஜோசப் - ஜீவா சதாசிவம்

December 22, 2017



இலங்கையின் பதுளை மாவட்டத்தில் ஊவா கட்டவளை என்னும் தேயிலைத் தோட்ட கிராமத்தில் ஆசிரியராக பணியாற்றிய சந்தனசாமிக்கும் பரிபூரணம் அம்மையாருக்கும் 1934 ஆம் ஆண்டு பெப்ரவரி பதினான்காம் திகதி மகனாகப் பிறந்தவர்  ஜோசப். மூன்று சகோதரர்கள் ஒரு சகோதரி என கத்தோலிக்க குடும்ப சூழலில் வளர்ந்த இறைநம்பிக்கை கொண்ட ஜோசப் தன் தந்தையையே குருவாகக் கொண்டு ஊவா கட்டவளை தோட்டத்துப்பள்ளியில் தொடக்க கல்வியை ஆரம்பித்தார். 

இரண்டாம் நிலை கல்விக்காக பதுளை செல்லவேண்டிய நிலையில் பேருந்து வசதிகள் இல்லாத காரணத்தால் தனது தந்தையின் பிறந்த ஊரான தமிழ்நாடு கும்பகோணம் லிட்டில் பிளவர் உயர் நிலைப் பள்ளியில் சிறிது காலம் கற்று மீண்டும் இலங்கை திரும்பி பதுளை சென்.பீட்ஸ் கல்லூரியில் சாதாரண தரம் வரை கல்விகற்றார்.  

தனது தந்தையின் வழியில் தெளிவத்தை என்னும் தேயிலைத் தோட்டத்து பள்ளியின் ஆசிரியராகவும் தோட்டத்து இலிகிதராகவும் சமகாலத்தில் பதவியேற்ற ஜோசப் வாசிப்பிலும் எழுத்திலும் அக்கறை காட்டத் தொடங்கினார். குடும்பத்தினருக்கு தமிழ்நாட்டுத் தொடர்புகள் இருந்ததன் காரணமாக தமிழக சஞ்சிகைகளை வாசிக்க பழகியுதுடன் தமிழக சஞ்சிகைகளுக்கு எழுதவும் தொடங்கினார். 

அறுபதுகளில் தமிழகத்தில் வெளிவந்த உமா என்னும் சஞ்சிகைக்கு அவர் எழுதிய 'வாழைப்பழத்தோல்' என்னும் சிறுகதையே அவரது முதல் சிறுகதையாக பதிவாகியது. அதனைத்தொடர்ந்து இலங்கையின் முன்னணி தேசிய தமிழ் பத்திரிகையான வீரகேசரி நடத்திய மலையக சிறுகதைப் போட்டியில் 1962, 1963, 1964 ஆகிய ஆண்டுகளில் தொடர்ச்சியாக சிறுகதைக்கான முதல்பரிசு பெற்று இலங்கையில் சிறுகதை படைப்பில் பிரபலமானார். அதுவரை ஜோசப் என்றிருந்த அவரது இயற்பெயருடன் அவர் தொழில் செய்து வாழ்ந்து வந்த தெளிவத்தை என்னும் பெயரும் ஒட்டிக்கொள்ள 'தெளிவத்தை ஜோசப்' என்னும் இலக்கிய பெயருக்கு சொந்தக்காரரானார். 

1974 ஆம் ஆண்டு வீரகேசரியில் தொடராக வெளிவந்த 'காலங்கள் சாவதில்லை' என்னும் புதினம் நூலாகவும் வெளிவந்து இலங்கை சாகித்ய மண்டல பரிசுக்கு பரிந்துரையானதுடன் நாவல் இலக்கியத்திலும் தன்னை அடையாளப்படுத்தினார். 1979 ஆம் ஆண்டு தெளிவத்தை ஜோசப்பின் முதலாவது சிறுகதை தொகுப்பான  'நாமிருக்கும் நாடே' (வைகறை வெளியீடு) வெளியானதுடன் அந்த ஆண்டு இலங்கை அரசின் தேசிய சாகித்ய விருதினையும் வென்றது. இதே சமகாலத்தில் தொழில் நிமித்தமாக பதுளை மாவட்டத்தில் இருந்து வெளியேறி இலங்கையின் தலைநகரமான கொழும்பில் குடியேறினார் தெளிவத்தை ஜோசப். 

மலையகத்தின் பதுளை மாவட்டத்தில் வசித்த போது மலையகத் தமிழ் மக்களின் வாழ்வியலை தன் படைப்புக்களால் அழகியல் உணர்வுடன் வழங்கிவந்த தெளிவத்தை ஜோசப் தலைநகரில் வாழத்தொடங்கிய பின்னர் மலையகம் மட்டுமல்லாது ஒட்டுமொத்த மானிடருக்காகவும் ஒடுக்கப்படும் மக்களுக்காகவும் தனது படைப்புகளை விரிவுபடுத்தினார். இனவாத தாண்டவம் எழுந்த கொழும்பு சூழலில் அவர் எழுதிய 'குடைநிழல்' (புதினம்) 'நாங்கள் பாவிகளாக இருக்கிறோம் அல்லது 1983' (புதினம்) போன்றவை இதற்கு சான்று. 

படைப்பு இலக்கியங்களில் மாத்திரமல்லாது இலக்கிய ஆய்வு முயற்சிகளில் ஈடுபட்ட தெளிவத்தை ஜோசப் மலையக சிறுகதை வரலாறு என்னும் தொடர் ஆய்வினை செய்து அதனை நூலாகவும் வெளிக்கொணர்ந்தார். இதற்காக 2000 ஆம் ஆண்டு இலங்கை அரச தேசிய சாகித்ய விருதினை ஆய்விலக்கியத்துக்காகப் பெற்றுக்கொண் டார். 

இலங்கையில் மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கும் இலக்கிய பயணம் மேற்கொண்ட தெளிவத்தை ஜோசப் கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, இந்தியா போன்ற நாடுகளில் சிறப்புரைகளை வழங்கியிருக்கிறார். எழுத்துத் துறைக்கு அப்பால் ஒரு ஆவண சேகரிப்பாளராக பல்வேறு இலக்கிய ஆவணங்களை சேகரித்து வைத்திருப்பதுடன் அவ்வப்போது இலக்கிய தகவல்களாக பத்திரிகைகளுக்கு எழுதியும் வருகிறார். 

இலக்கிய உலகில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக அயராது உழைத்துவரும் தெளிவத்தை ஜோசப்பின்  இலக்கிய பங்களிப்புக்காக பல்வேறு பல்கலைக்கழகங்கள், இலக்கிய அமைப்புகள், பல விருதுகளை வழங்கி  கௌரவித்துள்ளன. 2013 ஆம் ஆண்டு தமிழகத்திலும் விஷ்ணுபுரம் விருது தெளிவத்தை ஜோசப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. கொடகே தேசிய சாகித்ய விழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ள இவர் கலாசார அமைச்சின் 'தேச நேத்ரு' விருதுக்கும் உரியவரானார்.

தனது இரண்டாவது சிறுகதை தொகுப்பான 'தெளிவத்தை ஜோசப் சிறுகதைகள்' (பாக்யா வெளியீடு) நூலுக்காக  2013 ஆம் ஆண்டு தேசிய சாகத்திய பரிசு பெற்றவர்.  மொத்தமாக மூன்றுமுறை சாகித்ய விருதினை வென்றுள்ளதுடன். இலங்கையின் அதியுயர் இலக்கிய விருதான சாகித்ய ரத்னா விருது (2014) வென்ற முதல் மலையகத் தமிழராகவும் விளங்குகின்றார்.

இலங்கையில் மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் தலைவராகவும் தமிழ்–
சிங்கள எழுத்தாளர் ஒன்றியத்தின் தலைவராகவும்செ யற்படும் தெளிவத்தை ஜோசப் எழுதிய 'நாங்கள் பாவிகளாக இருக்கிறோம் அல்லது 1983' (பாக்யா வெளியீடு) என்னும் நாவலுக்காக தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம், சிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளையுடன் இணைந்து 2016 ஆம் ஆண்டுக்கான 'கரிகாற்சோழன் விருது' வழங்கி கௌரவிக்கின்றது. 

ஆரம்பத்தில் சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளின் தமிழ் இலக்கிய படைப்புகளுக்கு மாத்திரம் வழங்கிவரப்பட்ட கரிகாற்சோழன் விருது கடந்த ஆண்டு முதல் புரவலர் சிங்கப்பூர் முஸ்தபா வினால் இலங்கைக்கும் விரிவுபடுத்தப்பட்டது. கடந்த ஆண்டு இந்த விருதினை இலங்கை மலையக எழுத்தாளர் மு.சிவலிங்கம் தனது 'பஞ்சம் பிழைக்க வந்த சீமை' நாவலுக்காக பெற்றுக் கொண்டிருந்தமை  குறிப்பிடத்தக்கது.

2016 ஆம் ஆண்டு அயலகத்தில் வெளிவந்த நாவல், சிறுகதை, கட்டுரை ஆகிய நூல்கள் போட்டிக்காக தெரிவாகியிருந்தன. தேர்வாளர்களாக தமிழ்நாடு திறந்த பல்கலைக்கழகத் தமிழியல் துறைத் தலைவர் முனைவர் பாலசுப்பிரமணியன், பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர் பா.மதிவாணன், சாகித்ய அகடமி மேனாள் உறுப்பினர் கவிஞர் தங்கமூர்த்தி ஆகியோர் அடங்கிய குழு மேற்படி நூல்களை மதிப்பிட்டு தெரிவுசெய்துள்ளது.

2016 ஆம் ஆண்டு வெளிவந்த அயலகத் தமிழ் படைப்புகளுக்கான விருதுகளில் தெளிவத்தை ஜோசப் எழுதிய 'நாங்கள் பாவிகளாக இருக்கிறோம் அல்லது 1983' என்னும் புதினத்துக்கான (நாவல்) சிறப்பு  விருதாகவே இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 'கோ.சாரங்கபாணியின் தமிழ் முரசும் இன்றைய பார்வையும் என்னும் ஆய்வுநூலுக்காக சிங்கப்பூரைச் சேர்ந்த  தமிழாய்வாளர்  பாலபாஸ்கரனுக்கும், சை.பீர் முஹம்மது படைப்புகள் என்னும் சிறுகதைத் தொகுப்புக்காக மலேசிய எழுத்தாளர் சை.பீர்முஹம்மதுவுக்கும் மேற்படி விருதுகள் வழங்கப்படவுள்ளன. 

மேற்படி விருது வழங்கும் விழா இன்று 23.12.2017 சனிக்கிழமை சென்னை கவிக் கோ மன்றத்தில் நடைபெறவுள்ளது. தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர்.க.பாஸ்கரன் தலைமை யில் நடைபெறும் விழாவின் வரவேற்புரையை தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக அயல்நாட்டுத் தமிழ்க்கல்வி துறை தலைவர் இரா.குறிஞ் சிவேந்தன் வழங்க வாழ்த்து ரைகளை பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர் வ.மகேஸ்வரன், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்க தலைவர் பெ.ராசேந்திரன் சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் பொன்.சுந்தரராஜ் ஆகியோர் ஆற்றவுள்ளனர். 

பேராசிரியர் முனைவர் கு.ஞானசம்பந்தரின் சிறப்புரை இடம்பெறுவதுடன் தமிழ் பல்கலைக் கழக இணைவேந்தரும் தமிழ் ஆட்சி மொழி மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்ச ருமான க.பாண்டியராஜன் விருதுகளை வழங்கி வைப்பார். தகுதியுரைகளை தமிழ் கல் வித்துறை பேராசிரியர்களான முனைவர் உ.பிரபாகரன், முனைவர் ஞா.பழனிவேலு, முனை வர் தெ.வெற்றிச்செல்வன் ஆகியோர் வழங்கி வைப்பர். நன்றியுரையை முஸ்தபா தமிழ்அ றக்கட்டளை தலைவர் முஸ்தபா வழங்கி வைப்பார். 

நன்றி வீரகேசரி சங்கமம் (23.12.2017)



You Might Also Like

0 comments

வருகை தந்தோர்

Like us on Facebook

Flickr Images